Sunday, April 4, 2010

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பம்:! கா.அலாவுதீன் அறிவிப்பு.

சென்னை, ஏப்.1-2010: ஹஜ் பயணத்திற்காக 3 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் குலுக்கல் இன்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


இது குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ்குழு உறுப்பினர் செயல் அலுவலர் கா.அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2010-ல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவிற்கான விண்ணப்பப்படிவங்கள் சென்னை-34 புதிய எண்.13(பழைய எண்.7).,
மகாத்மாகாந்தி சாலை(௮ங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து
1.4.2010 முதல் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்ப படிவத்தின் நகலை எடுத்துக்கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200 பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்பு கணக்கு எண்.30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தங்களின் பன்னாட்டு பாஸ்போர்ட் இருப்பின் அதன் நகலினையும் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தால் இருப்பிட விலாசத்திற்கான சான்றினை இணைக்க வேண்டும். பரிசீலனைக் கட்டணமாக நபர் ஒருவருக்கு செலுத்தப்படும் தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு
சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள் 30.4.2010 ஆகும்.


ஹஜ் 2007-2009-ல் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தேர்வு செய்து உறுதிப்படுத்த மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. அவர்கள் குலுக்கல் ஏதுமின்றி ஹஜ் 2010-ல் புனித பயணத்திற்கு உறுதி செய்யப்படுவார்கள்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: