Monday, October 10, 2011

காரைக்காலில் கடலில் குளித்த இரண்டு மாணவர்கள் பலி.


காரைக்கால், அக்.9 . காரைக்கால் மாவட்ட புதிய கடற்கரை (எமரால்டு பீச்) பகுதியில் இன்று மாலை குளித்த இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபாக பலியானார்கள்.

காரைக்கால் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் யாகூப் மகன் ஜெகபர் சாதிக் சல்மான்(17), இவர் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் . காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஹாஜா மரைக்காயர் மகன் முகமது அஜ்மல்(14), இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் சக நண்பர்கள் மூன்று பேருடன் காரைக்காலை அடுத்த காசாகுடிமேடு பகுதியில் உள்ள புதிய கடற்கரை பகுதியில் (எமரால்டு பீச்) இன்று மாலை குளிக்க சென்றனர்.

ஜெகபர் சாதிக் சல்மானும், முகமது அஜ்மலும் கடலில் குளித்துகொண்டிருந்த போது, முகமது அஜ்மல் அலையில் சிக்கி அபாயக்குரல் கொடுத்தார். அப்போது, ஜெகபர் சாதி சல்மான் முகமது அஜ்மலை காப்பாற்ற அலையோடு போராடினார். அதற்குள் முகமது அஜ்மல் கடலில் மூழ்கி இறந்துபோனார். சிறிது நேரத்தில் ஜெகபர் சாதிக் அலையில் சிக்கி அபாயக்குரல் கொடுத்தார். கரையில் நின்ற நண்பர்களும் நண்பர்களை காப்பாற்றுமாறு வெகுதூரத்தில் மீன்பிடித்து படகில் திரும்பிகொண்டிருந்த மீனவர்களை பார்த்து கத்தினர். மீனவர்கள் விரைந்து வருவதற்குள் ஜெகபர் சாதிக் சல்மானும் கடலில் மூழ்கி இறந்துபோனார்.

தொடர்ந்து, கடலில் குதித்த மீனவர்கள் வெகு நேரம் போராடி இன்று இரவு சுமார் 7 மணிக்கு, இரண்டு வாலிபர்களின் உடலை கைபற்றி, கரைக்கு கொண்டு வந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இருவரது உடலையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் மூச்சி திணறி இறந்து வெகு நேரம் ஆகிறது என்றனர்.

தொடர்ந்து, கோட்டுச்சேரி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தை கேள்விப்பட்ட புதுச்சேரி வேளாண் அமைச்சர் சந்திரகாசு இருவரது குடும்பத்தினருக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

No comments: